தமிழக அரசிடம் சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு


சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக, ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது ஓராண்டு பதவிக்காலம் கடந்த மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைதொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.


ஆனால், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியாது என்று பொன் மாணிக்கவேல் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கில், சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 4 ஆம் தேதி உத்தரவிட்டது.


இதையடுத்து, தன்னால் விசாரிக்கப்பட்ட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிடி வடிவில் உள்ளதாகவும், அவை தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று பொன்மாணிக்கவேல் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாது, ஆவணங்களை ஒப்படைத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.