ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்த கார்


கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்ததில் கணவன் மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


குமரி மாவட்டம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஆறுகள், கால்வாய்கள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்த நிலையில் அஞ்சுகண்டறையைச் சேர்ந்த அனீஷ், தனது மனைவி மஞ்சு மற்றும் ஒன்றரை வயது குழந்தை அமர்நாத்துடன் குலசேகரத்துக்கு மாருதி அல்டோ காரில் சென்றுள்ளார்.


அங்கு கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு நோக்கி வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் கோதையாறு இடதுகரை கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.